இதுதாங்க நிலைமை...! தனியாரையும் பாருங்க...! தமிழக அரசையும் பாருங்க..! நியாயப்படுத்தும் பன்னீர்...!
தமிழக போக்குவரத்து துறையில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தியும் ரூ. 9 கோடி நஷ்டம் ஏற்படக்கூடிய சூழல் உள்ளதால் வேறு வழியில்லை என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, நிலுவை தொகை, ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் சில நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க போக்குவரத்து துறையில் நிதி இல்லாததால் முழுமையாக உடனே வழங்க முடியவில்லை என அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் காரணம் கூறி வந்தார்.
இதனால் ஊழியர் போராட்டம் நீட்டித்து கொண்டே சென்றது. அப்போது பேசிய அமைச்சர் போக்குவரத்து துறையில் வேலை பார்ப்பவர்கள் சேவை மனப்பான்மையுடன் வேலை பார்க்க வேண்டும் என கூறி வந்தார்.
மக்களின் நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் போக்குவரத்து ஊழியர்கள்.
இந்நிலையில் தற்போது திடீரென தமிழக அரசு பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தமிழக போக்குவரத்து துறையில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தியும் ரூ. 9 கோடி நஷ்டம் ஏற்படக்கூடிய சூழல் உள்ளதால் வேறு வழியில்லை என தெரிவித்தார்.
ஆந்திரா, கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைவு எனவும் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படுவதில் நான்கில் ஒரு பங்குதான் வசூலிக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.