Deny permission to campaign Dinakaran side pain
ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், பிரசாரத்தை தொடங்க முடியாமல் டிடிவி தரப்பினர் தவித்து வருகின்றனர்.
முன்னாள் எம்.பி.யான டிடிவி தினகரன், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜெ.வின் மறைவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த மார்ச் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ரத்து
செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த மாதம் 21 ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
திமுக வேட்பாளர் மருது கணேஷ் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் அவரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் மதுசூதனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். கொருக்குப்பேட்டை மற்றும் ஹரிநாராயணபுரம் பகுதிகளில் திறந்த வேனில் சென்று மதுசூதனனுக்கு ஆதரவாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.
அவர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் அவர்களுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்ய டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் இன்று பிரசாரம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் அனுமதி கோரிய நிலையில் மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் செய்ய தினகரனுக்கு கடந்த 4 நாட்களாக, காவல் துறை அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க முடியாமல் தினகரன் தரப்பு தவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையர், டிடிவி தினகரன் தரப்பு முறையிட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
