திமுக பணத்தை வைத்து ஓட்டு கேட்பதாகவும் அதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக பணத்தை வைத்து ஓட்டு கேட்பதாகவும் அதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். 21 மாத கால திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதற்கான விடை தெரியும். திமுக முன்னேற்றத்தை வைத்து ஓட்டு கேட்காமல் பணத்தை வைத்து ஓட்டு கேட்கிறார்கள்.
இதையும் படிங்க: பிப்ரவரி 14 - காதலர் தினத்துக்கு எதிராக.. பசுமாட்டை கட்டிப்பிடிப்போம் வாங்க.! - அர்ஜுன் சம்பத் அதிரடி
அதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. மிகப் பெரிய ஜனநாயக படுகொலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் எந்த அளவு விதிமீறல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை ஊடகம், பத்திரிக்கை நண்பர்கள் மக்கள் முன்பு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அதிமுக பற்றி விமர்சிக்க திமுகவிற்கு அருகதை இல்லை. திமுகவுடன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, போதைப்பொருள் நடமாட்டம், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவில்லை.
இதையும் படிங்க: ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் நான் மன்னிப்பு கேட்டேனா.? ஆடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சூர்யா சிவா!
8 வழிச்சாலை திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் இருக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தற்போது மௌனமாக இருக்கின்றன. மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத கட்சிகள் அனைத்தும் அடிமை கட்சிகள் தானே? திமுக வெற்றி பெற்றதும் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். இதுவரை அதற்காக மத்திய அரசிடம் குரல் கொடுத்திருக்கிறார்களா? திமுகவுடன் அங்கம் வகிக்கிற கூட்டணி கட்சிகள் அனைத்தும் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு திமுகவிற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
