மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஊருக்குள் வர முடியாது !! எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்!!
நாடாளுமன்றத்தை முடக்கினால் மட்டும் போதாது என்றும், நமது எம்.பி.க்கள் உரிய அழுத்தம் தந்து வெற்றியடைய வேண்டும் என்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் காவிரி மேலாண்மை அமைக்காமல் ஊருக்கு வந்தால் எம்.பி.க்களை கல்லால் அடிப்போம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய இறுதித்தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் ஒரு வார கால அவகாசம் மட்டுமே உள்ளது. ஆனால் இது வரை மத்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சையில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ப வந்த விவசாயிகள், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், நமது தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கினால் மட்டும் போதாது என்றும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தந்து வெற்றியடைய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் காவிரி மேலாண்மை அமைக்காமல் ஊருக்கு வந்தால் எம்.பி.க்களை கல்லால் அடிப்போம் என்றும் எச்சரித்தனர்.
மத்திய நீர்ப்பாசன்த் துறை அமைச்சரின் பேச்சு தவறானது என்று குற்றம் சாட்டிய விவசாயிகள், தற்போது நாங்கள் அனைவரும் வாழ்வதா? அல்லது சாவதா? என்ற மனநிலையில்தான் உள்ளோம் என்றும் கவலை தெரிவித்தனர்.