ப.சிதம்பரத்திற்கு கொசுவலை, முக கவசம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவக் குழு வாரம் ஒருமுறை பரிசோதித்து சிகிச்சை அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்க தேவையில்லை என மருத்துவக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், புற நோயாளியாக சிதம்பரத்திற்கு சிகிச்சை அளிக்கலாம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரால் வெளியில் வரமுடியவில்லை. 

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் உடல்நிலை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சிதம்பரத்தின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி எய்ம்ஸ் மருத்துவக் குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் உடல்நிலை குறித்த அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவக்குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

அதில், சிதம்பரத்தின் உடல்நிலை நன்றாக உள்ளது. மருத்துவமனையில் அனுமதித்து அவசர சிகிச்சை அளிக்க வேண்டியதில்லை. சிறை அறையை சுத்தம் செய்து, கொசுவலை அளித்தாலே போதும் என கூறியிருந்தது. இதனையடுத்து, ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. 

மேலும், ப.சிதம்பரத்திற்கு கொசுவலை, முக கவசம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவக் குழு வாரம் ஒருமுறை பரிசோதித்து சிகிச்சை அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்க தேவையில்லை என மருத்துவக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், புற நோயாளியாக சிதம்பரத்திற்கு சிகிச்சை அளிக்கலாம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.