Delhi Court grants bail to Dhinakaran sasikala will be gt bail

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், திகார் சிறையில் இருந்த அதிமுக துணை பொது செயலாளர் தினகரனுக்கு டெல்லி நீதி மன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரா வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் கைது செய்யப்பட்டார்.

லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முக்கிய ஆவணங்கள், தொலைபேசி உரையாடல்கள் எல்லாம் சிக்கியதாக கூறிய காவல் துறை, கடைசி வரை, லஞ்சம் பெற முயன்ற தேர்தல் ஆணைய அதிகாரி யார்? என்று வாய் திறக்கவே இல்லை.

இதை அடிப்படையாக கொண்டே, நான்கு முறை இழுத்தடித்த நீதிமன்றம், கடைசியாக நேற்று தினகரனுக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவர் சென்னை வருவதால், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகி உள்ளது.

சிறையில் இருந்த வந்த பின்னர், தினகரன் பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து பேசுவார் என்றும், இனி தீவிர அரசியலில் கவனம் செலுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது.

வரும் ஜூலை மாதத்தில், குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதால், அதிமுக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி க்களின் வாக்குகள், பாஜக வுக்கு தேவை படுகிறது.

தற்போதைய நிலையில், எடப்பாடி முதல்வராக இருந்தாலும், 90 சதவிகித எம்.எல்.ஏ, எம்.பி க்கள் தினகரன் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றனர். அதனால், அவர்களை பகைத்து கொண்டு, அதிமுகவின் வாக்குகளை பெற முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளது பாஜக.

இதை தொடர்ந்தே, தினகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சசிகலாவும் விரைவில் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அதனால், விரைவில் சசிகலாவும் வெளிவருவார் என்று அதிமுக தரப்பு உறுதியாக கூறுகிறது. அதேபோல் பன்னீர் அணியும் விரைவில் இணையும் என்றும், அமைச்சர்கள் சொல்வதையும், பன்னீர் சொல்வதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அரசியலில் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். கவுண்டமணி சொல்வதுபோல் “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.