தடுப்பூசி தயாரிக்க தாமதம்.. இறந்தவர்களுக்கு யார் பொறுப்பு.? மோடி அரசை கேள்விகளால் துளைக்கும் ப.சிதம்பரம்.!
தடுப்பூசி தயாரிக்க பிற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ஏற்பட்ட காலதாமதத்தில் உயிரை இழந்த மக்களுக்கு யார் பொறுப்பேற்பது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்கும் உரிமையை ஒரு நிறுவனத்துக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல நிறுவனங்களுக்கும் தடுப்பூசி தயாரிப்பு உரிமையை வழங்க வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி தயாரிக்க ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்து ட்விட்டரில் கருத்திட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “மற்ற மருந்து நிறுவனங்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்குங்கள் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசனை கூறி 4 வாரங்களுக்குப் பிறகே மற்ற நிறுவனங்களும் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் செய்த தாமதத்தால் தவிர்க்கமுடியாத பாதிப்புக்கு ஆளாகியது மக்கள்தான். உயிரை இழந்த மக்களுக்கு யார் பொறுப்பேற்பது?
வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய உத்தரவிட்டும், இதுவரை மத்திய அரசால் ஒரு வெளிநாட்டு உற்பத்தியாளரைக் கண்டறியமுடியவில்லை என்பது உண்மைதானே. மத்திய அரசு தொடர்ந்து மக்களிடம் பொய்யைக் கூறி வருகிறது” என்று ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.