போயஸ் வீட்டை எங்ககிட்டேயே கொடுத்துடுங்க! அதை நினைவு இல்லமா மாற்றினாலும் சம்மதமே: கன்னாபின்னாவென கன்பீஸ் செய்யும் தீபக்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது போயஸ்கார்டன் பக்கம் சிறகடிக்க சிட்டுக்குருவி கூட தயங்கும். ஆனால் அவர் மறைந்த பிறகு ரெய்டு, அளவீடு, நினைவில்லமாக்க முயற்சி, உரிமை கோரும் புரட்சி என்று ஆளாளுக்கு வெச்சு செய்கிறார்கள் அந்த வீட்டை.
வேதா நிலையத்தை நினைவில்லமாக்கும் அத்தனை முயற்சியிலும் அரசுத்துறை இறங்கியிருக்கும் நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகனும், தீபாவின் சகோதரருமாகிய தீபக், இந்த விவகாரம் குறித்து திருவாய் மலர்ந்திருக்கிறார்.
தெளிவாய் சொல்வதென்றால் கன்னாபின்னாவென கன்பீஸ் ஆகி பேசியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது அவர் “எவ்வளவோ சொத்துக்களை எங்க அத்தை சம்பாதிச்சாங்க. அதையெல்லாம் நாங்க கேட்கலை. ஆனால் இந்த போயஸ் வீடானது பாட்டி சந்தியாவின் வழியே எங்க அத்தைக்கு வந்தது. அதைத்தான் கோருகிறோம்.
எங்கள் சொத்தை நினைவில்லமாக மாற்றும் நடவடிக்கையை எங்களிடம் ஆலோசித்து எடுப்பது உட்பட அனைத்து சட்ட நடவடிக்கையையும் பின்பற்றுங்கள் என கேட்கிறோம். ஆனால் அப்படி பின்பற்றப்படுவதில்லை.
இந்த விஷயத்தில் தீபா ஏற்கனவே ஒரு வழக்கு போட்டுள்ளார். இந்நிலையில், அந்த சொத்துக்கு நாங்கள்தான் வாரிசு என அறிவிக்க கேட்டு நானும் தீபாவும் சேர்ந்து ஒரு வழக்கை தாக்கல் செய்ய உள்ளோம்.” என்று உரிமையை உளியடித்து அழுத்தம் காட்டி பேசியவர் பின்,
”அந்த வீட்டை நினைவு இல்லமாக அரசாங்கம் மாற்றினால் சம்மதம்தான். ஆனால் அதில் சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.” என்று சொல்லி அத்தனை பேரையும் தலைசுற்ற வைத்துள்ளார்.
பாவம் தீபக்! அவரே கன்பீஸ் ஆயிட்டார் போலிருக்குது.