deepa statement about admk government

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அமைதிப் பூங்காவை வைத்திருந்த தமிழகத்தை இன்று ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் கோமா நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள தீபா, உடனடியாக இந்த அரசை கலைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அனைத்து அரசு நிர்வாகமும் முடங்கி தமிழக அரசு கோமா நிலையில் உள்ளது என்றும், நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் திருட்டு, கொலை, கொள்ளை ,பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் நாள்தோறும் நடைபெற்று வருவதாக கூறினார்.

சசிகலாவின் பினாமி முதலமைச்சர் பழனிசாமியால் சட்டம் ஒழுங்கை அவரின் கட்டுக்கோப்பின் கீழ் கொண்டுவர முடியவில்லை என்றும் . தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்றும் தீபா தெரிவித்துள்ளார்.

கொடநாடு காவலாளி தொடங்கி டிரைவர் கனகராஜ், காண்ட்ராக்டர் சுப்பிரமணி வரை விபத்து, தற்கொலை என்று மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்

மக்கள் நிம்மதியாக வாழ மத்திய அரசு 356-வது விதியைப் பயன்படுத்தி சசிகலாவின் பினாமி அரசை காலதாமதமின்றி உடனே கலைத்துவிட்டு விரைவில் தேர்தல் நடத்தவேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.