சசிகலாவுடன் இணைவதா? நடக்கவே நடக்காது… அதிரடி தீபா….
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக அவருடைய தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆனால் அதிமுக தொண்டர்கள் சசிகலாவை விரும்பாததால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அக்கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று வலிறுத்தி வருகின்றனர்.
தி.நகரில் உள்ள தீபாவின் இல்லத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கூடிவருவது தீபாவுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று சொன்ன தீபா வரும் 24 ஆம் தேதி தனது முடிவை அறிவிக்க உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தீபா, பின்னர் தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தான் அரசியலுக்கு வருவதை அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்றும் அதை தொடர்ந்து தடுக்க அவர்கள் முயற்சி செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஆனால் தான் அதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என்றும் உறுதியுடன் தெரிவித்தார். தனது அத்தை ஜெயலலிதாவின் பிறந்த நாளான இம்மாதம் 24 ஆம் தேதி தனது அரசியல் முடிவு குறித்து அறிவிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் முழுவீச்சில் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தீபா தெரிவித்தார்.
சசிகலாவுடன் இணைந்து செயல்படுவீர்களாக என்ற கேள்விக்கு பதிலளித்த தீபா,அது ஒரு போதும் நடக்கவே நடக்காது என்றும் உறுதியுடன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்,கே.நகர் தொகுதியில் மீண்டும் ஒருமுறை சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தீபா தெரிவித்தார்.
