தீபாவுக்கு பெருகும் ஆதரவு…..கலக்கத்தில் கழக நிர்வாகிகள்….
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக வுக்கு தலைமை ஏற்பது யார்? என்பதில் தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது. அவரின் தோழி சசிகலா பொதுச் செயலாளராக, தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறார்
வரும் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் ஜெ வின் அண்ணன் மகள் தீபாவுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. கரூர் மாவட்டம்
குளித்தலை பகுதியில் பல்வேறு இடங்களில் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து, பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கரூரை அடுத்த கல்லடை ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களில், அ.தி.மு.க நிர்வாகிகள் தங்களது புகைப்படத்துடன், ஆதரவு பேனர்கள் வைத்துள்ளனர்.
ஆட்சியிலும், கட்சியிலும் பதவி வகிப்பவர்கள், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல இடங்களில், தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட முடியாத தொண்டர்கள் பலர், தீபாவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர்.
இது கிராம் கிராமமாக அதிகரித்து வருகிறது. முதலில் பெயரை மட்டுமே பேனரில் குறிப்பிட்டு வந்தவர்கள், இப்போது தங்கள் புகைப்படத்தையும் வைக்க துவங்கி உள்ளனர். இதை பார்த்து, அதிமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்..
இதேபோன்று சிவகங்கை மாவட்டம் பள்ளத்துாரில் தீபாவை ஆதரித்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பேனர் வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் இதனை அகற்ற காவல் துறையினர் உத்தரவிட்டனர். 'அம்மாவின் மருமகளே, தீபா அம்மா அவர்களே, நீங்கள் வாருங்கள் கட்சியை வழி நடத்த வருக! வருக!! என வரவேற்கிறோம் என்ற வாசகங்களுடன் வைக்கப்பட்டிருந்த அந்த பேனர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் பெருகி வரும் தீபா ஆதரவு போஸ்டர் மற்றும் பேனர்களால் அதிமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
