ஜெயலலிதா காலமானதையடுத்து அதிமுக வை அவரின் தோழி சசிகலா கைப்பற்றிக் கொண்டார். ஆனால் அதிமுக வின் அடிமட்டத் தொண்டர்கள் சசிகலாவை விரும்பவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பேனர்கள் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வர வேண்டும் எனவும் அதிமுகவுக்கு தீபா தலைமை ஏற்று நடத்திச் செல்ல வேண்டும் என்றும் தொண்டர்கள் விரும்புகின்றனர்.
இதனிடையே எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் அன்று, ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபா, தீவிர அரசியலில் குதிப்பதாக அறிவித்தார் தன் அரசியல் பயணம் குறித்த, அடுத்தகட்ட நடவடிக்கையை, ஜெ., வின் பிறந்த நாளான, அடுத்த மாதம், 24ல் அறிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்தார்.
இதையடுத்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவாளர்களின் ரகசிய கூட்டம், சென்னை, அயனாவரத்தில், நடந்தது.
இக்கூட்டத்தில், தீபாவின் கணவர் மாதவன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் திருச்சி சவுந்திரராஜன், பெரம்பலுார் இளவழகன், கோவை மலரவன், பொள்ளாச்சி ரத்தினம், உடுமலை மணிவாசகம் உட்பட, ஏழு பேர் பங்கேற்றறனர்.

இவர்களுடன் முன்னாள் எம்.பி. சேலம் அர்ஜுனன் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்., 24ல், புதிய கட்சி தொடங்குவது என்றும், உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் பேசப்பட்டது. கட்சியின் அலுவலகத்தை, சென்னை, கோயம்பேட்டில் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர் களை நியமிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வது என்றும், அதன்பிறகு முக்கிய முடிவுகள் எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
