deepa is not eligible to enter poes garden says nanjil sampath

ஜெயலலிதாவின் வீட்டுக்கு நுழைய அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு எந்த தகுதியும் இல்லை என நாஞ்சில் சம்பத் கூறினார்.

ஜெயலலிதாவின் வீட்டுக்கு, அவரது அண்ணன் மகள் தீபா சென்றார். ஆனால், அங்கு டிடிவி.தினகரனின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், தீபாவுடன் சென்ற ஆதரவாளர்களுக்கும், டிடிவி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையறிந்த பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் அங்கு திரண்டனர். ஆனால் போலீசார், செய்தி சேகரிக்க சென்றவர்களையும் அனுமதிக்கவில்லை. இதனால், அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதுகுறித்து அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் வீடு சொத்து அனைத்தையும் அபகரிக்கவே தீபா திட்டமிட்டுள்ளார். தீபா என்ற தீமையை அங்கே நுழைய விடக் கூடாது. அந்த வீட்டில் நுழைய தீபாவுக்கு எந்த தகுதியும் இல்லை.

இதுவரை ஜெயலலிதாவே தீபாவை பார்க்கவில்லை. அவரை உதாசினம் செய்தார். தீபாவை பார்க்க கூட விரும்பவில்லை. அவரது திருமணத்துக்கு கூட செல்லவில்லை. 

சசிகலா இருக்கும்போது டிடிவி.தினகரன் சென்றார். காரணம் அவர் கட்சியின் பொறுப்பாளராக இருக்கிறார். அதனால், அவர் அங்கு சென்றார். 

ஆனால் தீபா, எதற்காக போயஸ் கார்டன் செல்கிறார். தனது தம்பி தீபக் அழைத்ததாக கூறினார். ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செய்யவே அவரை அழைத்ததாக தெரிவிக்கிறார். அவ்வளவும் அப்பட்டமான பொய்.

இதற்கு முடிவு ஏற்படுத்த வேண்டுமானால், போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். இதற்கு எடப்பாடி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.