ஆர்.கே நகர் தொகுதியில் வயதான பெண்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதன் மூலம் பொது வாழ்க்கைக்கு வருவதை உறுதி செய்துள்ளார் ஜெ. அண்ணன் மகள் தீபா.

தி. நகர் சிவஞானம் தெருவில் வசிக்கும் தீபா வீட்டை தினந்தோறும் ஆயிரகணக்கான அதிமுக அதிருப்தி தொண்டர்கள் சந்தித்து வருகின்றனர்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தன் அத்தை போட்டியிட்டு வென்ற ஆர்.கே நகருக்கு சென்ற தீபா மூன்று தனித்தனி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அறவிப்பு எதுவும் செய்யாமல் சென்ற தீபாவுக்கு அங்கு கூடிய கூட்டம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த எம்ஜிஆர் ஏழை மக்களை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து விடுவார்.

அல்லது வயதானவர்களின் காலை தொட்டு கும்பிட்டு ஆசி வாங்குவார்.

அதே போன்று தீபாவும் நேற்று முதியோர் இல்லத்துக்கு சென்றபோது அங்கிருந்த வயதான பெண்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

இதனை தொடர்ந்து தண்டையார்பேட்டையில் உள்ள முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு தீபா சென்றார்.

அங்குள்ள வயதான பெண்களிடம் நலம் விசாரித்து பின்னர் அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

மேலும் அந்த முதியோர் இல்லத்தில் வைக்கபட்டிருந்த அண்ணா,எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அரசு பள்ளிக்கும், இரட்டை குழி தெருவில் உள்ள பார்வையற்றோர் இல்லத்துக்கும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தீபா ஆர்.கே.நகரில் போட்டியிடுவது பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு "ஆர்.கே.நகரில் போட்டியிடுவது உறுதி" என்று தெரிவித்தார்.