‘ஜெயலலிதா ஏற்றிய தீபத்தை அணையாமல் காப்போம்’ தீபா பேச்சு – நாளுக்கு நாள் பெருகுகிறது ஆதரவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5ம் தேதி காலமானார். இதையடுத்து முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம், அதிமுக பொது செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். சசிகலா பொது செயலாளராக பொறுப்பேற்றதற்கு, அதிமுக தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, அதிமுகவை வழி நடத்தும்படி கூறி அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தீபாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போஸ்டர், பேனர், கட்அவுட், பிளக்ஸ் பேனர்களை அமைத்து வருகின்றனர். அதே பகுதியில் ஒட்டப்பட்டு வரும் சசிகலா குறித்த போஸ்டர்களை கிழித்து எறிகின்றனர்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டுக்கு திருவண்ணாமலை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் நேற்று திரண்டனர். அவர்களிடம் தீபா பேசியதாவது:–
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நல்ஆசியுடன் நற்பணிகளை விரைவில் தொடருவோம். அதற்கு முன்பாக எல்லோருடைய கருத்தையும் தெரிந்துகொண்டு நல்ல பாதையில் பயணிப்போம். எனவே உங்களுடைய கருத்துகளை எழுதி தரும்படி கேட்கிறேன்.
தாய் பிள்ளையை காப்பது போல் ஜெயலலிதா நம்மை எல்லாம் காத்து வந்தார். அவருடைய புகழை நிலைநாட்டுவதற்கு அனைவரும் சற்று பொறுமை காக்க வேண்டும். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம். அன்று முதல் நமக்காக ஒரு பாதையை அமைத்துக்கொள்வோம்.
ஜெயலலிதா சுடர்விட்டு எரிய வைத்த தீபத்தை அணையாமல் காப்போம். நான் ஏற்கனவே சொன்னேன், நான் (தீபா) உங்கள் வீட்டு பிள்ளை. அதில் எந்த மாற்றமும் இல்லை. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வரும் காலங்களில் நன்கு பணியாற்றுவேன் என்றார்.