"பட்ஜெட் கூட்டத் தொடரை உடனடியாக கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்" - திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்
தமிழக சட்டப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 24 ஆம் தேதி வரை நடைபெற்ற சட்டப் பேரவை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்லையொட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் போன்ற எதுவும் நடைபெறவில்லை. இதனால் சட்டப் பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என திமுக செயல் தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பட்ஜெட் தொடர் முடித்து வைக்கப்பட்டு விட்டதாக, எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் இது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
சட்டமன்ற கூட்டத் தொடர் நடத்துவது பற்றி கவர்னருக்கு கடிதம் அனுப்பியது, அதிமுகவின் இரு அணிகளின் கோஷ்டி பூசலில் மக்கள் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரை உடனடியாக கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும், திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.