Asianet News TamilAsianet News Tamil

விஜயகாந்த் மறைவு.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, டிடிவி.தினகரன், சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

Death of Vijayakanth.. Biggest loss for entire Tamil Nadu.. Political leaders condole tvk
Author
First Published Dec 28, 2023, 9:59 AM IST | Last Updated Dec 28, 2023, 10:01 AM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு தேமுதிக தொண்டர்கள் மற்றும் சினிமா துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும்  தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய  பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் 

அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.  அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும், தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

புதுச்சேரி துணை நிலை ஆளுநர்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர், சகோதரர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.

நல்ல திரைப்படக்கலைஞர்....
நல்ல அரசியல் தலைவர்....
நல்ல மனிதர்....
நல்ல சகோதரர்....
ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்.

சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,தொண்டர்களுக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை 

தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர். கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு என தெரிவித்துள்ளார். 

டிடிவி.தினகரன் இரங்கல்

திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும். தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தே.மு.தி.க தலைவர் திரு. #விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. 'உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று, எப்படியும் உடல் நலம் தேறி மீண்டு வருவார்' என்ற நம்பிக்கையும் இன்று சேர்ந்தே மறைந்து விட்டது. ஆற்றொண்ணா துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினர், தே.மு.தி.க தொண்டர்கள், மற்றும் அவரது ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios