எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களுக்கிடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டு குழு அறிவிப்பு குறித்த பிரச்னையில் பாஜக மேலிட உத்தரவால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களுக்கிடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையடுத்து வழிகாட்டு குழு அமைக்க முதல்வர் எடப்பாடி ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது வழிகாட்டு குழுவில் இடம்பெற மூத்த நிர்வாகிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இன்று அல்லது நாளை வழிகாட்டு குழு அறிவிக்கப்பட்டு, அறிவித்தபடி நாளை அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கிறார். 

இது ஒருபுறமிருக்க முதல்வர் எடப்பாடியும் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கும் பணியில் இன்று ஈடுபட்டுள்ளார். அதன்படி வழிகாட்டு குழுவில் 5 பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், 6 பேர் எடப்பாடி ஆதரவாளர்களும் இடம்பெற உள்ளனர். எடப்பாடி தரப்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் (அல்லது தளவாய்சுந்தரம்) நத்தம் விஸ்வநாதன், அன்வர்ராஜா, தங்கமணி, வேலுமணி ஆகிய 6 பேர் இடம் பெறுகின்றனர். அதேபோன்று ஓ.பி.எஸ். தரப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெ.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் அல்லது எம்.எல்.ஏ மாணிக்கம், வைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன், தேனி கணேசன் அல்லது விருதுநகர் பாலகங்கா ஆகியோரில் 5 பேர் இடம் பெறுகிறார்கள்.

தற்போது எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அமைக்கப்பட உள்ள 11 பேர் வழிகாட்டு குழுவில் இடம்பெற அதிமுக மூத்த நிர்வாகிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கவுண்டர் சமுதாயத்தினர் 2 பேர் இடம்பெற்றுள்ளனர். தம்பித்துரை, செங்கோட்டையன் இடம்பெறவில்லை. இதனால் அவர்கள் இருவரும் அதிருப்தி அடைந்துள்ளனர். அமைச்சர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அமைச்சர்கள் அல்லாத மூத்த தலைவர்களுக்கு வழிகாட்டு குழுவில் இடம் அளிக்க வேண்டும் என்று சில மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தன்னுடைய தரப்பில் 6 பேர் கொண்ட குழுவை தயார் செய்த எடப்பாடி பழனிச்சாமி, அந்தப் பட்டியலை அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, உதயகுமார் ஆகியோரிடம் வழங்கியுள்ளார்.