பொதுக்குழுவுக்கு யாரும் போகக்கூடாது - நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் டிடிவி...!!!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கும் பொதுக்குழு உண்மையானது அல்ல எனவும் அதில் அதிமுக நிர்வாகிகள் யாரும் கலந்து கூடாது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மீறினால் கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் சசிகலா தினகரனை நீக்குவது குறித்து விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி தெரிவித்தார்.
இதைதொடர்ந்து எடப்பாடிக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை எனவும், செப்.12-ல் அதிமுக பொதுக்குழு கூடும் என்று எடப்பாடி அறிவித்திருப்பது சட்டவிரோதம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து செய்தியாளருக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்குழுவை எதிர்ப்பதற்கு டிடிவி தினகரனுக்கு அதிகாரமில்லை எனவும், மூன்றில் ஒரு பங்கு பொதுக்குழு நிர்வாகிகளின் ஆதரவோடு பொதுக்குழு கூட்டப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுகவில் 100 சதவிகித ஒப்புதலோடு பணிகள் நடைபெறுவதாகவும், ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர் டிடிவி தினகரன் கட்சியில் உரிமை கொண்டாடகூடாது எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கும் பொதுக்குழு உண்மையானது அல்ல எனவும் அதில் அதிமுக நிர்வாகிகள் யாரும் கலந்து கூடாது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மீறினால் கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.