ஒரே வாரத்துக்குள் சேதமடைந்த புத்தங்களுக்கு மாற்று புத்தகம்… செங்கோட்டையன் அதிரடி ….
கஜா புயலால் புத்தங்களை இழந்து நிற்கும் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மாணவர்களுக்கு ஒரு வாரத்துக்குள் புதிய புத்தங்களை வழங்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்யைன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.
புயல் வருவதற்கு முன்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் வெகுவாக பாராட்டினர். ஆனால் மீட்புப் பணிகள் சிறப்பாக இல்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. குறிப்பாக புயல் வந்து செனறு 4 நாட்கள் ஆகியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு போகவில்லை என அம்மாவட்டங்களில் உள்ள கொந்தளித்துப் போயுள்ளனர்.
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை இன்று பார்வையிட்டார். அப்போது பள்ளிக் குழந்தைகள் அவரிடம் தங்களது புத்தகங்கள் எல்லாம் புயலில் சேதமடைந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து இன்னும் ஒரு வாரத்துக்குள் சேதமடைந்த புத்தகங்களுக்கு பதில் மாற்றுப் புத்தகங்கள் வழங்கப்படம் என அமைசர் செங்கோட்டையன் உறுதி அளித்தார். இதே சேதமடைந்த பள்ளிகளும் வெகு விரைவில் சீரமைத்துக் தரப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே 'கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரண பொருட்கள் எடுத்துச் சென்றால் கட்டணம் வாங்க வேண்டாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.