பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார், "என்னைக் கைது செய்யும் இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ள பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள்" என்று டிவீட் செய்து கலாய்த்துள்ளார். 

பண மோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரிடம் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத் துறையினர் இன்று இரவு அவரை கைது செய்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள சிவகுமார், தன்னைக் கைது செய்யும் இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ள பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒருவழியாக என்னைக் கைது செய்யும் இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ள பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள். அரசியல் காரணங்களுக்காக வருமான வரித் துறையும், அமலாக்கத் துறையும் என் மீது வழக்குகள் போட்டுள்ளன. பாஜகவின் வெறுப்பு மற்றும் பழிதீர்க்கும் அரசியலுக்கு நான் பலியாகியுள்ளேன்.

சட்டத்துக்குப் புறம்பாக நான் எதுவும் செய்யவில்லை. அதனால் கட்சி நிர்வாகிகள், எனது ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் யாரும் மனம் உடைந்துவிட வேண்டாம். கடவுள் மீதும், நீதித் துறை மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த பழிதீர்க்கும் அரசியலுக்கு எதிராக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என சிவகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்