சசிகலா விவகாரத்தை கிளப்பி காரியம் சாதிக்க சி.வி.சண்முகம் முயற்சி..? புகாருக்கு இப்படியொரு பின்னணியா..?
சண்முகத்தின் அப்பா வேணுகோபாலை கட்சியிலிருந்து நீக்கினார் எம்.ஜி.ஆர். சசிகலா இல்லையென்றால் அதிமுகவில் சண்முகத்துக்கு முகவரியே கிடையாது.
அதிமுகவை விரைவில் கைப்பற்றுவேன் என்கிற ரீதியில் அதிமுக - அமமுக கட்சி நிர்வாகிகளிடம் சசிகலா பேசி வெளியான ஆடியோக்களுக்கு, எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்பேரில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் கடுமையாக பதிலடி கொடுத்து
வருகின்றனர்.
அதிமுகவில் சசிகலா நுழையவே முடியாது என ஆவேசம் காட்டும் சி.வி.சண்முகம், ஒரு படி மேலே போய், சசிகலாவின் தூண்டுதலில் தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் சசிகலா உள்ளிட்ட பலரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். இந்தப் புகார் மனு அதிமுக மற்றும் அமமுகவில் உள்ள சசிகலா ஆதரவாளர்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இந்நிலையில், சி.வி.சண்முகம் கொடுத்த புகாரின் பின்னணியில் வேறு ஒரு மர்மம் மறைந்துள்ளது என விவரிக்கின்ற சசிகலாவின் ஆதரவாளரும் அமமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான என்.வைத்தியநாதன், “முந்தைய எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அமைச்சர் என்கிற முறையில் அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் சி.வி. சண்முகம் தோற்றுப்போனார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் வீழ்ந்துபோனது. இதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திமுக அரசு திரும்பப் பெறவிருக்கிறது. இதனையறிந்த அவர், தனது போலீஸ் பாதுகாப்பை தொடர நினைக்கிறார்.
சசிகலாவைப் பற்றி பேச இவருக்கு எந்த தகுதியும் கிடையாது. அதிமுகவுக்குத் துரோகம் செய்ததால்தான் சண்முகத்தின் அப்பா வேணுகோபாலை கட்சியிலிருந்து நீக்கினார் எம்.ஜி.ஆர். சசிகலா இல்லையென்றால் அதிமுகவில் சண்முகத்துக்கு முகவரியே கிடையாது. கட்சியில் மா.செ. பதவியையும், அமைச்சர் பதவியையும் ஜெயலலிதாவிடம் சொல்லி சண்முகத்துக்கு வாங்கிக் கொடுத்தவர் சசிகலாதான். அதிமுகவையும் சண்முகத்தையும் அறிந்த மூத்த தலைவர்கள் பலருக்கும் இது தெரியும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சண்முகத்தை விழுப்புரம் மா.செ.வாக நியமித்தவர் சசிகலா. அவர் நியமித்த அந்தப் பதவியில்தான் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறார் சி.வி. சண்முகம். சசிகலாவை எதிர்க்கிற இவர், அவர் கொடுத்த பதவியைத் தூக்கி எறிய வேண்டியதுதானே? அவரது அப்பாவைப் போலவே, தன்னை வளர்த்துவிட்டவர்களுக்குத் துரோகம் செய்வது சண்முகத்துக்கும் கைவந்த கலை’’என்கிறார்.