தமிழக நிதிநிலை அறிக்கையில் மின்கட்டணம் கண்டிப்பாக உயர்த்தப்பட  இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக அரசு பதவியேற்று தனது இரண்டாவது பட்ஜெட் வருகிற 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்டஜெட்டை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ள மகளிர் உரிமை தொகையான 1000 ரூபாய்க்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இதுபோல பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழக அரசின் நிதி சுமை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் புதிய திட்டங்களை அறிவிப்பதில் தமிழக அரசு அதிகளவு யோசிக்கும் என்றே கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மகளிர் உரிமை தொகை

ஏற்கனவே தமிழகத்தின் கடன் சுமை 5,70,189 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவிக்க யோசித்து வருகிறது. மகளிர் உரிமை தொகை மற்றும் சமையல் எரிவாயு விலை குறைப்பு உள்ளிட்டவைகளை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததும் இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதனால் தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகள் கேள்வி கேக்கும் நிலை திமுகவிற்கு ஏற்பட்டது. எனவே தற்போதைய பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகைக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசுக்கு 2 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி தேவைப்படுகிறது. இதற்காக மதுபான விலையை 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை உயர்த்தி வருவாயை அதிகரித்துள்ளது. வேறு எந்த வழியில் நிதியை பெருக்கலாம் என தமிழக அரசு யோசித்து வருகிறது. எனவே இந்த பட்ஜெட்டில் வரி விதிக்க கூடும் எனவும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் எதிர்கால நலனுக்காக சில மருந்துகள் எடுத்துகொண்டு தான் ஆக வேண்டும் என கூறியிருந்தார். எனவே இந்த பட்ஜெட் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மின்சார கட்டணம் உயரும்?

இந்தநிலையில் தமிழக நிதி நிலை அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
தேர்தலுக்கு பிறகு பெட்ரோல்,டீசல் விலை உயர்வை பற்றி யாரும் பேசவில்லையென தெரிவித்தவர், மதுபானங்களின் விலை உயர்வு பற்றி தான் தற்போது பேசிக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் 33 ஆயிரம் கோடி வருவாய் மதுக்கடைகளினால் வருவதாக கூறிய அண்ணாமலை, இந்த விலையேற்றத்தின் காரணமாக 2ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக தமிழக அரசிற்கு வருவாய் வரவுள்ளதாக கூறினார். ஆக இந்த 35ஆயிரம் கோடியில் தான் தமிழக அரசு செயல்படுகிறது எனவும் அண்ணாமலை தெரிவித்தார். இது தான் திராவிட மாடல் ஆட்சியா? எனவும் திமுக அரசை விமர்சனம் செய்தார். தமிழக பட்ஜெட்டில், 20% க்கும் அதிகமாக மின் கட்டணம் உயர்வது உறுதி என தெரிவித்தவர், மேயர் தேர்தல் தற்பொழுது முடிந்துள்ள நிலையில், கொலுசு போன்ற பரிசு பொருட்களுக்காக செய்த செலவினை எடுப்பதற்கு, இந்த பட்ஜெட்டில் விலையேற்றம், வரி உயர்வு கண்டிப்பாக இருக்கும் என தெரிவித்தார்