அதிகாரிகளுடன் அரசு பேருந்தில் பயணம் செய்த கடலூர் கலெக்டர்..! மனதார பாராட்டும் மக்கள்..!
அதிகாரிகளுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே அரசு பேருந்தில் பயணம் செய்துள்ள சம்பவம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசு அதிகாரிகள் என்றாலே, கார்களில் விரைவதுதான் வழக்கம். அதிலும் கலெக்டர் என்றால், அவர் செல்லும்போது அவரது வாகனம் மட்டுமல்லாமல் மற்ற சில அதிகாரிகளின் வாகனங்களும் அணிவகுத்து செல்லும்.
விஐபி கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில், ஆட்சியர் முதல் குடியரசுத்தலைவர் வரை யாருமே வாகனங்களில் சிவப்பு சைரன் பொருத்தக்கூடாது என மத்திய அரசு அறிவித்தது.
விஐபி கலாச்சாரத்தை ஒழிக்க இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அரசு அதிகாரிகள், தங்களை விஐபி-க்களாக காட்டிக்கொள்ளாமல், மக்களுடன் மக்களாக இருந்தால்தான், அவர்களில் ஒருவராக அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
அந்த வகையில், சில உயரதிகாரிகள், எப்போதுமே எளிமையாக மக்களுடன் மக்களாக இருந்து குறைகளை அறிந்து அவற்றை கலைந்துவருகின்றனர்.
தற்போது, கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே அரசுப் பேருந்தில் பயணம் செய்து மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தில் இன்று மனுநீதிநாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள காரில் செல்லாமல், அரசு அதிகாரிகளுடன் அரசு பேருந்தில் ஆட்சியர் பயணம் செய்தார்.
டீசல் செலவைக் குறைக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் அரசு பேருந்துகளின் மீதும் அரசின் மீதுமான நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையிலும் இந்த பயணத்தை அடையாள பயணமாக மேற்கொண்டதாக ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியரின் இந்த செயல், மக்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இதேபோன்று, மற்ற ஆட்சியர்கள் உட்பட அனைத்து அரசு உயரதிகாரிகளும் எளிமையாக இருந்து, அவ்வப்போது பொது போக்குவரத்தை பயன்படுத்துவதோடு, தங்களது குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.