தேர்தல் ஆணையத்தை விமர்சனங்களில் இருந்து காத்த நீதிமன்றம்..!
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக அரசியலில் காலூன்ற முயலும் பாஜக, அதற்காக அதிமுகவை பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஜெயலலிதா இருக்கும்போது, மாநில உரிமைகளைப் பறிப்பதாகக்கூறி எந்தெந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்தாரோ, ஜெயலலிதா உடல்நலம் குன்றியபிறகு அத்திட்டங்களுக்கு எல்லாம் தமிழக அரசு அனுமதி அளித்தது.
தமிழகத்தில் மத்திய அரசு நினைப்பதை எல்லாம் செயல்படுத்த, மத்திய அரசை எதிர்க்காத ஒரு தலைமையின் கீழ் மாநில அரசு இருக்க வேண்டும் என்பதற்காகவே பன்னீர்செல்வத்தை பாஜக ஆதரிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி செயல்பட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, இரட்டை இலைக்கு பன்னீர்செல்வம் உரிமை கோரியபோது, இரண்டு அணிகளுக்கும் கிடைக்கக்கூடாது என்பதால்தான் இரட்டை இலை முடக்கப்பட்டதாகவும் தினகரன் தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர்.
தேர்தல் ஆணையத்தை மத்திய பாஜக அரசு இயக்குவதாகவும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தில் மத்திய அரசு அத்துமீறி அதிகாரம் செலுத்துவதாகவும் குற்றச்சாட்டு இருந்தது.
பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து, இரட்டை இலையை தங்களுக்கே ஒதுக்கக்கோரியபோது, தினகரன் அணி தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என கோரியது. இதையடுத்து இருதரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், இருதரப்பு வாதங்கள் ஆகியவற்றை கேட்டறிந்து ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், இரட்டை இலையை பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிக்கே ஒதுக்கியது.
இரட்டை இலையை பழனிசாமி அணிக்கு ஒதுக்கிய மறுநாளான இன்று, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தலை ஆணையம் வெளியிட்டுள்ளது.
எனவே இதுதொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை எழுப்புகின்றன.
இவ்வாறு இரட்டை இலை முடக்கப்பட்டதிலிருந்து மீண்டும் இரட்டை இலையை ஒதுக்கி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அறிவித்ததுவரை தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டின் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
இரட்டை இலையை ஒதுக்கியதோ இடைத்தேர்தல் அறிவிப்போ நடந்தாக வேண்டிய ஒன்றுதான் என்றாலும், அவை அறிவிக்கப்பட்ட காலத்தை வைத்தே தேர்தல் ஆணையத்தின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சின்னம் முடக்கப்பட்டபோது தினகரன் சார்ந்திருந்த அதிமுக அணி, பெரும்பான்மையை பெற்றிருந்தது. ஆனால் அப்போது சின்னத்தை முடக்கிவிட்டு தற்போது தினகரன் இல்லாத அணிக்கு, பெரும்பான்மையை காரணம் காட்டி சின்னத்தை ஒதுக்கியதற்கு தினகரன் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் சந்தேகிக்கின்றனர். தினகரனுக்கு எதிரான பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிக்கு சாதகமான முடிவை உள்நோக்கத்தோடு எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், இரட்டை இலை ஒதுக்கீடு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு ஆகிய விஷயங்களில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டின் மீதான சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்க நீதிமன்றங்கள்தான் உதவியாக இருக்கின்றன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிசம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமும், இரட்டை இலை ஒதுக்கீடு தொடர்பாக நவம்பர் 10-க்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.
எனவே, நீதிமன்றங்களின் உத்தரவின் அடிப்படையில்தான், இரட்டை இலை சின்னம் வழக்கு முடித்துவைக்கப்பட்டு, இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது என்பதை தேர்தல் ஆணையத்தின் மீதான விமர்சனங்களுக்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.