வாக்கு எண்ணும் மையத்தில் கலவரம் செய்ய சதி.. துரைமுருகன் மீது அதிமுக பரபரப்பு புகார்.!
காட்பாடி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அவரது மகன் ஆகியோர் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
காட்பாடி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அவரது மகன் ஆகியோர் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது.இந்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபுமுருகவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளரின் வெற்றி மிகப் பிரகாசமாக இருப்பதாகவும் இதனால் இறுதி முயற்சியாக வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை ஏற்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் அல்லது வாக்குபதிவு இயந்திரங்களை சேதப்படுத்த வேண்டும் என திமுக வேட்பாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த சூழலை கருத்தில் கொண்டு காட்பாடி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். முகவர்கள் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே மையத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். குறிப்பாக வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை ஏற்படுத்துவார்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் உடனடியாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.