கொரோனா கட்டுப்பாடுகள் நவ.30 வரை நீட்டிப்பு… அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! | #CMStalin
#CMStalin | தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இரண்டு வார காலத்திற்கு எவ்வித தளர்வுகளும் இன்றி தீவிர கட்டுப்பாடுகள் ஊரடங்கு அமலுக்கு வந்தன. இதன் விளைவாக கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்தது. எனவே ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதை அடுத்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி முறையில் பாடங்களை நடத்த தொடங்கி உள்ளன. கோவில்கள் திறப்பு, தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி, சுற்றுலா தலங்கள் திறப்பு, ஹோட்டல்களில் அமர்ந்து உண்ண அனுமதி, முழு வீச்சில் பொது போக்குவரத்திற்கு அனுமதி என அனைத்து தளர்வுகளும் அமலில் உள்ளன. இதனால் தமிழகம் இயல்பு நிலையை நோக்கி திரும்பி உள்ளது.
இருப்பினும் கொரோனா 3வது அலை அச்சம் நிலவுவதால் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில் டெங்கு பரவ வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும். கடைகளின் வாயில்களில் சானிடைசர் வைக்க வேண்டும். சமூகம் சார்ந்த, அரசியல் சார்ந்த கூட்டங்களைக் கூட்டுவதற்குத் தடை என்பது நீட்டிக்கப்படுகிறது.
கடைகளில் பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்களும் முகக் கவசம் அணிவதை உறுதிசெய்யவேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கண்டிப்பாக இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மழை காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினை கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களுக்குச் செல்ல வேண்டும். நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இடி மற்றும் மின்னல் ஏற்படும் பொழுது முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மழைக்காலத்தில் தண்ணீர் தொடர்பான தொற்று நோய்கள் பரவும் என்பதால் பொதுமக்கள் காய்ச்சிய நீரை குடிக்கவேண்டும். அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.