COVID 19: உச்சத்தை எட்டும் கொரோனா... வேறு வழியே இல்லை.. 'அந்த' முடிவை எடுக்கும் தமிழக அரசு..?
உச்சத்தை நோக்கி கொரோனா சென்று கொண்டிருப்பதால் சனிக்கிழமையும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: உச்சத்தை நோக்கி கொரோனா சென்று கொண்டிருப்பதால் சனிக்கிழமையும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் மீண்டும் கொரோனாவின் பிடியில் சிக்கி கொண்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக எண்ணிக்கை குறைவாக இருந்த தருணம் இப்போது தலைகீழ்.
5 ஆயிரம், 7 ஆயிரம், 10 ஆயிரம், 15 ஆயிரம் தொற்றுகள் என்று இருந்த நிலைமை உல்டாவாகி இப்போது 23 ஆயிரத்தை எட்டி உள்ளது. நேற்றைய ஒரு நாள் கொரோனா பாதிப்பு 23, 989 ஆக பதிவாகி இருக்கிறது. பலி எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை.
ஒருபுறம் கொரோனா மறுபுறம் உருமாறிய ஓமைக்ரான் என்று மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. தொடரும் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது.
மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு, அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்றவை கிடைக்காது. ஆனாலும் கொரோனா தொற்றுகள் வேகம் எடுத்துள்ளதாக தற்போதைய சூழலில் கடும் கட்டுப்பாடுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இன்னும் பொங்கல் கொண்டாட்டங்கள் முடியாத நிலையில் இவ்வாறு பாதிப்புகள் உயர்ந்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பொங்கல் விடுமுறை முடிந்து அனைவரும் அவரவர் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பும் சூழலில் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று கூறப்படுகிறது.
அப்படி ஒருவேளை நடக்கும் பட்சத்தில் அது நோய் தொற்று பரவலை அதிகரிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர். எனவே கட்டுப்பாடுகள் அல்ல, கடுமையாக கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டிய சூழலுக்கு தற்போது தமிழக அரசு நகர்ந்து கொண்டு இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதாவது, கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும் அல்லது கட்டுப்பாடுகளின் பிடிகளை மேலும் இறுக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்திருக்கிறது.
தற்போது தமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் உள்ளது. இது தவிர மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் இது போதாது என்று சுட்டிக்காட்டும் விவரம் அறிந்தவர்கள், ஞாயிறு போன்று சனிக்கிழமையும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் அல்லது முழு ஊரடங்கை அமல்படுத்துவது அவசியம் என்ற கருத்துகளை முன் வைக்க ஆரம்பித்துள்ளனர்.
அதே நேரத்தில் மக்களின் பொருளாதாரம் எவ்விதத்திலும் முடங்கும் அளவுக்கு இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, சனிக்கிழமையும் முழு ஊரடங்கை கொண்டு வரலாமா என்று தீவிர ஆலோசனையில் தமிழக அரசு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சனி. ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு, வழிகாட்டு நெறிமுறைகள் என கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நிச்சயம் பலனை கொடுக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அனைத்தையும் தீவிர பரிசீலனை மற்றும் கவனத்தில் கொண்டு முதல்வர் தரப்பில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. எத்தனை கட்டுப்பாடுகள் அறிவித்தாலும் அவை அனைத்தையும் முறையாக கடைபிடிக்கும் பொறுப்பு மக்களிடம் இருப்பதால் அவர்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.