கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலா, விடுதலையாக ஒரு வாரத்துக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரை பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த 27 அன்று சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனைக் காலம் முடிந்து சசிகலா விடுதலை ஆனார்.
ஆனால், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்ததால், மருத்துவமனையிலேயே அவர் இருந்தார். இந்நிலையில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலும் குறைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. செயற்கை சுவாச உதவியின்றி அவர் தொடர்ந்து நல்ல முறையில் சுவாசிப்பதாகவும், அவருடைய சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


என்றபோதும் ஒரு வாரத்துக்கு சசிகலா தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, மருத்துவமனையிலிருந்து சசிகலா டிஸ்சார்ஜ் ஆனாலும், பெங்களூர்விலேயே தங்க சசிகலா திட்டமிட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள உறவினர் அல்லது ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி ஓய்வு எடுத்த பிறகு பிப்ரவரி 5-ஆம் தேதி சசிகலா சென்னைக்கு திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.