செங்கோட்டையனை வீழ்த்திய திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கொரோனாவால் உயிரிழப்பு... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்..!
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பி.வெங்கிடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பி.வெங்கிடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜி.பி.வெங்கிடு (86). கடந்த 1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். மேலும் கோபி நகர திமுக செயலாளர், தலைமை கழக பேச்சாளர், பொதுக்குழு உறுப்பினர் உள்பட கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும், கோபி நகராட்சி கவுன்சிலராகவும் இருந்து உள்ளார்.
குறிப்பாக 65 ஆண்டுகளுக்கும் மேலாக, திமுக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றவர். இவர் தினசரி மார்க்கெட் அருகே பெட்டிக்கடை வைத்திருந்தார். எம்.எல்.ஏ பதவிக்காலம் முடிந்த பின்னும் பெட்டிக்கடையில் வியாபாரம் செய்து வந்தார்.
இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிப்புக்குள்ளானார். இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜி.பி.வெங்கிடுவுக்கு திரிபுராம்பாள் என்ற மனைவியும், 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.