அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் 2வது அலைக்கு வாய்ப்பு இருக்கிறதா? அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு தகவல்..!
கொரோனா தடுப்பு ஊசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் விரைவில் வரும். இரண்டு தடுப்பூசி மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவைகள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு ஊசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் விரைவில் வரும். இரண்டு தடுப்பூசி மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவைகள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழக முதல்வர் எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டிலேயே சில மாநிலங்களில் இந்த வைரஸ் தாக்குதல் சற்று அதிகரித்த நிலையிலும், தமிழகத்தில் தொடர்ந்து கொரோ வைரஸ் தாக்குதலுக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை 500-க்கும் குறைவாகவே உள்ளது. இதற்கு பொதுமக்கள் முதலில் முதலமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
மேலும், கொரோனா நோயினால் பொதுமக்கள் இறப்பு விகிதம் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதல் குறைவாக காணப்பட்டாலும், பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். மேலும், பொதுமக்கள் அனைவருமே கொரோனா வைரஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தடுப்பூசியை பற்றி சிலர் வதந்தியை பரப்பி கொண்டிருக்கிறார்கள். அது இயல்பு தான். மேலும் கொரோனா தடுப்பு ஊசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் விரைவாக வரும். இரண்டு தடுப்பூசி மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவைகள். ஆகவே இதில் விவாதத்திற்கு இடமே இல்லை. மிகச்சிறப்பாக அரசு கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் இதுவரை 3.59 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை என முன்களப் பணியாளர்கள் தடுப்பூசியை போட்டு வருகின்றனர். ஆக கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் எப்போதும் அச்சப்படத் தேவையில்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.