தினகரனை தூக்க ஸ்கெட்ச் போடும் குரல் சோதனை! இரட்டை இலை லஞ்ச வழக்கில் மீண்டும் திகாரா?
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்ரிசேகர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து சுகேஷை, டெல்லி குற்றபிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். சுகேசின் வாக்குமூலத்தை அடிப்படையாக ககொண்டு டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதன் பிறகு, டி.டி.வி. தினகரன், ஜாமினில் வெளிவந்தார். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற முயன்ற வழக்கு தற்போது டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரனின் பெயர் இடம் பெறவில்லை. இந்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் போலீசார் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, சுகேஷ் என்பவரிடம் தினகரன் தரப்பு 10 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், முன்பணமாக 1.5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சுகேஷ் சந்திரகேகர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். மேலும், டிடிவி தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் தேதி தினகரன் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 42 நாட்களுக்குப் பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
டெல்லி போலீசார், நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் இல்லை எனவும், போதிய ஆதாரம் இல்லை என்பதால், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால், டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோர் டெலிபோனில் உரையாடிய ஆடியோ ஒன்று டெல்லி போலீசாரிடம் உள்ளது.
குரல் பரிசோதனைக்கு தினகரன் ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுகேஷ் உடன் பேசியுள்ளது டிடிவி தினகரன்தான் என்பதை டெல்லி போலீசார், பரிசோதனையில் உறுதிபடுத்தி உள்ளனர். தற்போது போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், தினகரன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால், அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடலாம் என்று கூறப்படுகிறது. தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா, புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம் ஆகியோர் மீதும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.