AIADMK General Secretary Shashikala continue fighting against the police action and raising in Theni district

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக தொடர்ந்து போர்க்கொடி உயர்த்திய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். காவலரான இவர் மறைந்த முன்னாள் முதல்வரின் தீவிர விசிறி… சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது, சீருடையுடன் மொட்டை அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

இது சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாற உயர் அதிகாரிகள் பெயரளவுக்கு விசாரணை நடத்தி வேல்முருகனை அனுப்பிவைத்தனர்.

பன்னீர் செல்வமே பம்மிய காலத்தில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலா தான் காரணம் என்று காலரைத் தூக்கிவிட்டு கடுகடுத்தவர் காவலர் வேல்முருகன்….

இதோடு விட்டாரா, தேனியில் உள்ள நேரு சிலை முன்பு வந்து ஜெயலலிதாவின் மரணத்திற்கு அவரது தோழி சசிகலா தான் காரணம் என்று உரக்கச் சொல்ல அவரை ஆயுதப் படைக்கு பந்தாடியது காவல்துறை

வகிப்பது காவலர் பதவி தான் என்றாலும் காரம் குறையாமல் சசிகலாவை தொடர்ந்து விமர்சிக்கத் தவறவில்லை வேல்முருகன்….இதனைத் தொடர்ந்து அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இருப்பினும் இதற்கெல்லாம் அஞ்சாத வேல்முருகன், பணியிடை நீக்கத்தைக் கண்டித்தும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும் பென்னி குயிக் சிலை முன்பு சீருடையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

இந்நிலையில் வேல்முருகனை பதவிநீக்கம் செய்து தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பல அமிளிதுமுளிகளை அதிரடியாக அரங்கேற்றிய வேல்முருகனின் அடுத்தகட்ட செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….