congress playing with manisankar iyer says finance minister anun jaitly

மணி சங்கர் ஐயர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர், அருண் ஜேட்லி. அவர் இது குறித்துக் கூறியபோது, பிரதமர் மோடி மீதான மணிசங்கர் ஐயரின் விமர்சனம் சாதிய ரீதியிலானது. இது தொடர்பாக மணிசங்கர் ஐயர் மன்னிப்பு கேட்பது, பின்னர் அவரைக் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி தற்காலிகமாக நீக்குவது, இதை எல்லாம் நாம் ஒரு விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னதாக, இந்தப் பிரச்னை நேற்று தேசிய ஊடகங்களில் பூதாகாரமாக வெடித்தது. பிரதமர் நரேந்திரமோடி, நேற்று தில்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தை திறந்து வைத்தபோது, காங்கிரஸ் கட்சியை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். ‘ஓட்டுக்காக அம்பேத்கர் பெயரை பயன்படுத்தும் கட்சிகள் சில, தேசத்தை கட்டமைத்ததில் அவர் ஆற்றிய பங்கை மறைக்க முயற்சி செய்கின்றன. இந்த முயற்சியில் ஈடுபடும் குடும்பத்தைக் காட்டிலும், அம்பேத்கரின் சிந்தனைகள்தான் மக்களை அதிகமாகக் கவர்ந்துள்ளன. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது கொள்கைகளை மக்கள் நினைவில் இருந்து அகற்ற முடியாது’ என்று பேசினார். 

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘அம்பேத்கரின் திறமையை அங்கீகரித்தவர் முதல் பிரதமரான நேரு. ஆனால் மோடி ஒரு நீச்ச பிறவி. அவருக்கு மரியாதை என்பதே தெரியாது. இந்த நிகழ்ச்சியில் இத்தகைய மலிவான அரசியலில் அவர் ஈடுபட வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டார். 

மோடியை நீச்ச பிறவி என்று அவர் குறிப்பிட்டது, சாதீய ரீதியான தாக்குதல் என்று பா.ஜ.க. தலைவர்கள் பலரும் மணிசங்கர் ஐயருக்குக் கண்டனம் தெரிவித்தனர். 

இதற்கும் பதிலளிக்கும் விதமாக, குஜராத் மாநிலம் சூரத்தில் நரேந்திர மோடி பேசும் போது, “நன்கு படித்த ஒருவர், என்னை ‘இழிபிறவி’ என்று கூறுகிறார். எனது சாதியை கேள்விக்கு உள்ளாக்குகிறார். இது குஜராத்துக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு. இந்த விவகாரத்தில், பதிலுக்கு பதிலாக என்று யாரும் வார்த்தை மோதல்களில் ஈடுபட வேண்டாம் என்று கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். குஜராத்தின் மண்ணின் மைந்தனுக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்புக்கு குஜராத் தேர்தலில் உங்கள் பதிலை அளியுங்கள் என்று கூறினார். 

இந்த விவகாரம், காங்கிரஸில் பெரும் புயலைக் கிளப்பியது. தற்போது, குஜராத் தேர்தலை மையப் படுத்தி, காங்கிரஸ் அரும்பாடு பட்டு படேல் சமூகத்தையும் வேறு வேறு சமுதாய மக்களையும் சாதி ரீதியாக இணைத்து ஆளும் பாஜக.,வுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், மணி சங்கரின் இந்தப் பேச்சு காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து, கலவரமடைந்த காங்கிரஸ் மணிசங்கர் அய்யர் மீது நேற்று இரவு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், குஜராத் தேர்தல் மட்டும் இல்லை என்றால், காங்கிரஸ் இப்படி நடவடிக்கை எடுக்குமா என்றும், ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவும், பிரியங்காவும் கூட 2014ல் இதே போன்ற வார்த்தையைப் பயன்படுத்தி மோடியை விமர்சித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் கூறுகின்றனர் பாஜக.,வினர். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ராகுலின் முதல் அறிமுகமே இப்படி பிரச்னைக்குரியது ஆகிவிட்டது தேசிய அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.