நாங்க ஏன் திமுகவிடம் துணை முதல்வர் பதவி கேட்கப்போறோம்.. காங்கிரஸ் கட்சி திடீர் பல்டி..!
திமுகவிடம் துணை முதல்வர் பதவி கேட்டு தீர்மனம் நிறைவேற்றியதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன. காங்கிரஸ் கட்சியும் தேர்தலுக்கு பரபரப்பாக தயாராகிவருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் துணை முதல்வர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் சென்னை மேற்கு மாவட்ட சென்னை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் இந்தத் தகவல் பேசுபொருளானது.
இந்நிலையில் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி இதை மறுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10/09/20 அன்று சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று எந்த தீர்மானும் நிறைவேற்றப்படவில்லை. சில தொலைக்காட்சி ஊடகங்களில் வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது” என்று தெரிவித்துள்ளார்.