காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ தகுதிநீக்கம்..! கொரோனா பீதிக்கு மத்தியில் அரசியல் பரபரப்பு
புதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பாகூர் தொகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்துகள் இல்லை, அவசர உதவிக்கு ஆம்புலன்ஸை இயக்க டீசல் போடக்கூட முடியாத நிலையில், தனது சொந்த தொகுதி மக்களின் உயிருடன் புதுச்சேரி அரசை கண்டித்து பொதுமக்களுடன் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினார். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தனவேலு போராட்டம் நடத்தியது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பற்றி ஊழல் குற்றச்சாட்டுகளையும் கூறினார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தனவேலு, முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுமைத்தன்மை இல்லையென்று கூறி, அவரை முதல்வர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் மனுவும் அளித்தார். ஏற்கனவே கிரண்பேடிக்கும் நாராயணசாமிக்கும் இடையே அதிகார மோதல் இருந்துவந்த நிலையில், அவரிடமே சென்று தனவேலு புகார் அளித்தது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தனவேலு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அத்துடன் நிற்காமல், அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம், தனவேலுவை எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தினர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலுவை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளார்.
கொரோனா பீதிக்கு மத்தியிலும் புதுச்சேரி அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.