அதிமுக பாஜகவின் கைப்பாவை என்பதற்கு இந்த உதாரணம் போதாதா..? திருமாவுக்காக களமிறங்கிய காங்கிரஸ்!
பா.ஜ.க.வின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுகிறது என்பதற்கு தொல்.திருமாவளவன் மீது தொடுக்கப்பட்டிருக்கிற வழக்கே உரிய சான்றாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்துத் தெரிவித்ததாக மத்திய குற்றப்பிரிவு ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர் அளித்த புகாரின் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது.
சனாதன வர்ணாசிரம மனுஸ்மிரிதியில் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக கூறப்பட்டுள்ள கருத்துக்களை கண்டிக்கிற வகையில் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்காரும் எத்தகைய கருத்துக்களை கூறினார்களோ, அதற்கு வலிமை கூட்டுகிற வகையில் இணைய கருத்தரங்கில் தொல். திருமாவளவன் ஆற்றிய உரைக்காக இந்த வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் பேசப்பட்ட கருத்துக்களை திரித்து, புனைந்து அவதூறு பிரச்சாரத்தை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் செய்து வருகின்றனர். இதற்கு துணை போகிற வகையில் திராவிட இயக்கத்தின் பெயரில் கட்சி நடத்துகிற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு, தொல். திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது ஆகும். இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்கிற ஆற்றலும், சக்தியும் தொல். திருமாவளவனுக்கு இருக்கிறது.
எனவே, பா.ஜ.க.வின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுகிறது என்பதற்கு தொல்.திருமாவளவன் மீது தொடுக்கப்பட்டிருக்கிற வழக்கே உரிய சான்றாகும். இத்தகைய வகுப்புவாத சக்திகளின் அச்சுறுத்தலுக்கு எதிராகவும் தொல். திருமாவளவனுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் உள்ள மதசார்பற்ற முற்போக்கு சக்திகள் துணை நிற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.