ரஜினியின் பின்வாங்கல் பாஜகவுக்கு தோல்வி... பாஜகவை சீண்டும் கே.எஸ். அழகிரி..!
ரஜினி அரசியலிலிருந்து பின்வாங்கியது பாஜகவின் தோல்வி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
கால் நூற்றாண்டாக அரசியல் கட்சி தொடங்குவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31 அன்று கட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்’ என்று அறிவித்து கட்சி தொடங்குவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர். ரஜினிகாந்தின் இந்த முடிவு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ரஜினிகாந்த் ஆரம்பத்திலிருந்தே அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. ஆன்மீகவாதிகள் தேர்தல் அரசியலை விரும்பமாட்டார்கள். ரஜினி அரசியலிலிருந்து பின்வாங்கியது பாஜகவின் தோல்வி” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.