காங் தலையில்லா முண்டம்.. தமிழர்கள் செத்து மடிந்த பிறகு இந்து ஈழமா..?? அண்ணாமலையை புரட்டி எடுத்த சீமான்.
தமிழர்கள் செத்து மடிந்த பிறகுதான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விரைவில் இந்து ஈழம் அமைப்போம் என அண்ணாமலை கூறியுள்ள நிலையில் சீமான் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர்கள் செத்து மடிந்த பிறகுதான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விரைவில் இந்து ஈழம் அமைப்போம் என அண்ணாமலை கூறியுள்ள நிலையில் சீமான் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். புலவர் கலியபெருமாள் அவர்களின் 13ஆவது நினைவு தினத்தை ஒட்டி சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:- 16 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திருமண நிகழ்ச்சியில் புலவர் கலியபெருமாள் சந்தித்தேன். தனது வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை அவர் எனக்கு வழங்கினார்.
தனது வாழ்நாள் அனுபவத்தை சுருக்கி எழுதிய அந்த புத்தகத்தில் மக்களை அணிதிரட்டி அரசியல் படுத்தாமல் புரட்சியை முன்னெடுக்க முடியாது என கடைசி இரண்டு வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது என்றார். தொடர்ந்து தமிழக முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு போர்க்கால அடிப்படையில் துரிதமாக நடவடிக்கை எடுக்கும் விஷயங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து தமிழக அரசு சொத்து வரி உயர்வை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் சிற்றூர்களை தவிர்த்து 80% மக்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த வரி உயர்வு காரணமாக வாடகை தொகை உயர்கிறது. இந்த வரிகளின் மூலம் அரசின் வருமானம் பெருகும். ஆனால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்து ஈழம் அமைப்போம் என கூறியுள்ளார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு செத்து மடிந்த பிறகுதான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா? இதுவரை முகாம்களில் உள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்காததும் ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் நிலைமை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தலைமை இல்லாத காரணத்தால் தலையில்லாத முண்டமாக காங்கிரசை நான் பார்க்கிறேன், காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் கொள்கையில் ஒன்றாக ஐந்து வருட ஆட்சியில் ஒரு தலைவருக்கு ஒரு பதவி தான் என்ற நிலைப்பாட்டை வரவேற்கிறேன் என்றார். எம்மொழியும் கற்கலாம் ஆனால் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்ற கமலஹாசன் கருத்தை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.