நம்முடன் கூட்டணியில் இருந்துவிட்டு கமலுடன் கள்ளத்தனமாக ஏன் பேச வேண்டும்? அவர்களைப் போல் அல்லாமால் 3வது அணி என சொல்லிக்கொண்டிருக்கும் கமலுடன் நாம் வெளிப்படையாகப் பேசுவோம்

திமுக மீது ஏற்கெனவே சந்தேகத்தில் இருக்கின்றன கூட்டணி கட்சிகள். இதில், எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றிய கதையாக சமீபத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட ஒரு தகவலால், அவர்கள் மேலும் கொதிப்படைந்துள்ளனர். 

இதனால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே திமுக கூட்டணி ஆட்டம் கண்டுவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக கூட்டணி விஷயத்தில் சபரீசன், உதயநிதி உள்ளிட்டவர்களின் தலையீடு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. யாரை கூட்டணியில் சேர்க்க வேண்டும், எத்தனை சீட் கொடுக்க வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களைச் செய்ய சொல்லி, அவர்கள் ஸ்டாலினுக்கே உத்தரவிடுகிறார்கள். கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஸ்டாலினிடம் தாம் சில யோசனைகளைச் சொன்னதாக உதயநிதியே அண்மையில் ஒப்புக்கொண்டிருந்தார்.

சபரீசனோ, கூட்டணி விஷயத்தை தானே டீல் செய்கிறார். சபரீசன் பேச்சைக் கேட்டு, புதுச்சேரியில் தனித்துப் போட்டி என அண்மையில் ஜெகத்ரட்சகனை அனுப்பி, அவமானப்பட்டதுதான் மிச்சம். புதுச்சேரியில் வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டியிடும் என ஜெகத் அறிவித்தார். இதனால், தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இதனால் பதறிய சபரீசன், டெல்லிக்கு விரைந்து ராகுலை சந்தித்து சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், ராகுல் அவரை சந்திக்க மறுத்துவிட்டார். பின்னர் ஸ்டாலின் தலையிட்டு கெஞ்சியதால், காங்கிரஸ் சமாதானமடைந்தது.

இவ்வளவு நடந்த பின்னரும் சபரீசன் அடங்கியபாடில்லை. கமல்ஹாசனுடன் கூட்டணி தொடர்பாக போன் மூலம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். திமுகவுக்கு நெருக்கமான தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மத்தியஸ்தராக செயல்பட்டுள்ளார். அப்போது திமுக கூட்டணிக்கு வந்தால் 20 இடங்கள் வரை தருகிறோம் என சபரீசன் வாக்குறுதி கொடுத்துள்ளார். கமல் உடனடியாக எந்த பதிலும் தரவில்லை. யோசித்து சொல்வதாகக் கூறி விட்டார்.

இதை சபரீசன் ஸ்டாலினிடம் சொன்னபோது,’’ஏற்கெனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கொடுக்கவே இடங்கள் இல்லை. இதில் கமல் கட்சிக்கு எப்படி கொடுப்பது?’’ என அவர் கேட்டுள்ளார். அதற்கு சபரீசன், காங்கிரஸைப் பொறுத்தவரை நமக்கு வேஸ்ட். அகில இந்திய அளவில் நமக்கு ஒரு சப்போர்ட் வேண்டும் என்பதற்காகத்தான் அதைக் கட்டி அழ வேண்டியதுள்ளது. இருப்பினும் கடந்த 2016 தேர்தலில் கொடுத்தது போல 41 சீட் அளவுக்கு இல்லாமல், அதில் பாதியை மட்டும், அதாவது 20 இடங்கள் மட்டுமே கொடுத்தால் போதுமானது’’ என சொல்லி உள்ளார். இதுவும் காங்கிரஸ் காதுக்கு எட்டி, அந்த கட்சி கடும் ஆத்திரத்தில் இருக்கிறது.
இந்தச் சூழலில்தான், சமீபத்தில் நடந்த தனது கட்சியின் பொதுக்குழு மேடையில், திமுக தலைமை தன்னிடம் தூதுவர்கள் மூலம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக பகிரங்கமாக போட்டு உடைத்துவிட்டார் கமல்.

இது ஒருபுறம் இருக்க, திமுகவுக்கு தேர்தல் ஆலோகராக பணியாற்றும் பிரசாந்த் கிஷோரும் தன் பங்குக்கு குழப்பி வருகிறார். மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கெல்லாம் 2 அல்லது 3 சீட்டுகள் கொடுத்தால் போதும் என ஆரம்பம் முதலே ஸ்டாலினிடம் அவர் வலியுறுத்தி வருகிறார். இதை ஏற்றுக் கொள்ள ஸ்டாலின் தயங்கி உள்ளார். உடனே ஐபேக் டீம், சபரீசனிடம் விஷயத்தைக் கொண்டு சென்றிருக்கிறது.

சபரீசன் அதை ஏற்றுக் கொண்டு, தூதர்கள் மூலம் கூட்டணி கட்சிகளை அழைத்து 2 சீட், 3 சீட் என பேரம் பேச, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கொதித்து விட்டனர். இந்தச் சூழலில்தான், கடந்த 18 ஆம் தேதி மதுரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஸ்டாலின் முன்கூட்டியே பேசிவிட்டுச் சென்று விட்டார். அவர் சென்ற பின், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி பேசி உள்ளனர். அப்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘’ கௌரவமான அளவில் இடங்கள் தராவிட்டால் திமுக கூட்டணியில் நீடிப்பதில் அர்த்தமில்லை. 

நம்முடன் கூட்டணியில் இருந்துவிட்டு கமலுடன் கள்ளத்தனமாக ஏன் பேச வேண்டும்? அவர்களைப் போல் அல்லாமால் 3வது அணி என சொல்லிக்கொண்டிருக்கும் கமலுடன் நாம் வெளிப்படையாகப் பேசுவோம்’’ என்பது அந்த அவசரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்கிறார்கள். ஆக மொத்தத்தில், கடந்த முறை விஜயகாந்தால் உடைந்த திமுக கூட்டணி, இந்த முறை கமல்ஹாசனால் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. சபரீசன், ஐபேக் அத்துமீறல்களால் ஸ்டாலின் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.