முத்தலாக் விவகாரத்தில் காங்கிரசின் ‘இரட்டை நிலைப்பாடு’....பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் அருண் ஜெட்லி குற்றச்சாட்டு
முத்தலாக் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டை கொண்டு இருப்பதாக பாஜக மூத்த தலைவரும் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி குற்றம் சாட்டி இருக்கிறார்.
எம்.பி.க்கள் கூட்டம்
பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் அருண் ஜெட்லி மேற்கண்டவாறு பேசியதாக, நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் அனந்த குமார் தெரிவித்தார்.
இந்த தகவலை கூறியதாக பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது தெரிவித்தார். நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அனந்த குமார் கூறியதாவது:-
முட்டுக்கட்டை
“அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தோடு உடனடி முத்தலாக்குக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு விரும்புகிறது. காங்கிரஸ் இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
மக்களவையில் ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மாநிலங்களையில் முட்டுக்கட்டை போட
முயற்சிக்கிறது என அருண் ஜெட்லி கூறினார்.”
இவ்வாறு அனந்த குமார் கூறினார்.
மோடி-அமித்ஷா
நேற்று நடைபெற்ற பாஜகவின் எம்.பி.க்கள் குழு கூட்டத்தில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக உள்ளதால், முத்தலாக் மசோதா அங்கு எளிதில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் அக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.
எதிர்க்கட்சிகள் ஆதரவு
இதனால், இந்த மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சாராத ஆதரவு கட்சி உறுப்பினர்களை சார்ந்து உள்ளது.
முத்தலாக் மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுடன் அரசு பேசி வருவதாகவும் அனந்த குமார் தெரிவித்தார்.
முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள உடனடி ‘முத்தலாக்’ முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, நாடாளுமன்ற மக்களவையில் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா’ தாக்கல் செய்யப்பட்டு, கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.