காங்கிரஸ் அரசு குஜராத்தின் வளர்ச்சியை தடுத்தது; என்னை எதிரியாக நடத்தியது... மோடி பகீர் குற்றச்சாட்டு!
2012ம் ஆண்டில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, குஜராத் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை திட்டமிட்டு நிறுத்தியது. என்னை எதிரிபோல நடத்தியது என்று பிரதமர் நரேந்திர மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்தார்.
குஜராத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக விஜய் ரூபானி இருந்து வருகிறார். இமாச்சலப்பிரதேசத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இந்த சூழலில் பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்துக்குள் 3-வது முறையாக குஜராத் சென்று வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து வருகிறார்.
குஜராத் மாநிலத்தின் கனவுத் திட்டம் எனச் சொல்லக்கூடிய நகரங்களுக்கு இடையிலான படகு போக்குவரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ரூ. 615 கோடி செலவில் தாஜேஸ்-கோஹா நகரங்களுக்கு இடையே நீர்வழிப் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளுக்கு இடையிலான பயண தொலைவு 6 மணி நேரத்தில் இருந்து அதாவது 310 கி.மீ தொலைவில் இருந்து 30 கி.மீட்டராக குறையும். ஏறக்குறைய ஒரு மணிநேரத்தில் கடக்க முடியும்.
இந்த திட்டத்தை கோஹா நகரில் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது-
கடந்த 2012ம் ஆண்டில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குஜராத் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை றுத்தி, தொழில்வளர்ச்சியை முடக்க முயற்சித்தது. நான் குஜராத் முதல்வராக இருந்த போது, மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசால் எதிரிபோல நடத்தப்பட்டேன். ஆனால், இப்போது மத்தியில் பா.ஜனதா ஆட்சி வந்தபின், கடந்த 3 ஆண்டுகளாக மாற்றம் செய்துள்ளோம், குஜராத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.
எனக்கு வாக்களித்து என்னை பிரதமராக கடந்த 2014ம் ஆண்டுஅமர்த்தியவுடன், குஜராத் மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சித்திட்டங்களும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் சரியான வழியில் வந்து சேரும் என்று உறுதியளித்தேன்.
நாட்டில் உள்ள கடல்வழி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொள்ள அரசு முயல்கிறது. கோஹா மற்றும் தாஹேஜ் நகரங்களுக்கு மட்டும் முக்கியத் திட்டம் அல்ல, இது ஒட்டுமொத்த நாட்டுக்கே முக்கியமான திட்டமாகும். நகரங்களுக்கு இடையிலான படகு போக்குவரத்து, இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவுக்கே மிகவும் புதிதானது. குஜராத் மக்களின் கனவு நனவாகியுள்ளது.
இந்த ஒரு வழியோடு படகுப் போக்குவரத்தை நிறுத்தப்போவதில்லை, மற்ற நகரங்களுக்கும் இணைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த படகு போக்குவரத்து மூலம் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறும், ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
கால்நடை வளர்ப்பில் இருக்கும் வாய்ப்புகளை மக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். லோத்தல் நகரில் கடல்சார் பல்கலையும், கடல்சார் அருங்காட்சியகமும் விரைவில் அமைக்கப்படும்.
நம்முடைய சாலைப் போக்குவரத்து துறை இன்னும் முழுமையாக, போதுமான அளவில் ஒருங்கிணைக்கப்டவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனால், இதை கடந்த 3 ஆண்டுகளில் மாற்றி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.