ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே பூசல்... அதிமுகவில் குழப்பம்... கொளுத்திப் போட்ட ப.சிதம்பரம்..!
எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் ஒத்துப்போகாதநிலையில் அதிமுகவில் குழப்பம் நீடித்துவருகிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார். “ஓர் அரசு 5 முறை மட்டுமே முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யாமல், முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின்றன. வழக்கமான மரபை முதல்வர் மீறக் கூடாது. அப்படி மீறினால் சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவிப்போம். தமிழக அரசு நான்கு ஆண்டுகள் 9 மாதங்கள் முழு ஓய்வில் இருந்துவிட்டு, கடைசி 3 மாதங்களில் பல அறிவிப்புகளை வெளியிடுவதெல்லாம் தேர்தல் வேடிக்கை மத்தாப்புதான்.
மத்திய பட்ஜெட்டில் ஒரு ரூபாயைக்கூட ஒதுக்காமல் தேர்தலுக்காக தமிழகம், கேரளாவுக்கு பல ஆயிரம் கோடி திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இந்தியப் பொருளாதாரம் கடந்த இரு ஆண்டுகளாகச் சரிந்து அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இவர்களால் இந்தியப் பொருளாதாரத்தை நிச்சயமாக தலைநிமிரவே செய்ய முடியாது. அதற்கான உத்தியும் இவர்களிடம் இல்லை; புத்தியும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் ஒத்துப்போகாதநிலையில், இடையே டிடிவி தினகரன் நுழைகிறார். இதனால் அதிமுகவில் குழப்பம் நீடித்துவருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவைச் சொந்தம் கொண்டாடி இரு தரப்பும் வர உள்ளன. அப்படி வந்தால், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.