Asianet News TamilAsianet News Tamil

கிடைக்குமா.. கிடைக்காதா? இப்படி காத்திருப்பது கடுமையான மன உளைச்சலை தரும்.. அரசுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்.!

இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் என, காலியாக உள்ள 430 பணியிடங்களும் பொதுப்போட்டிப் பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். இந்தப் பணியிடங்களை நடப்பாண்டின் தொடக்கத்திலேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பியிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாததால், அதன்பின் கொரோனா இரண்டாவது அலை, சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அந்தப் பணிகளுக்கான கலந்தாய்வை நடத்த முடியவில்லை. 

Conduct Phase II Consultation: Ramadoss request
Author
Tamil Nadu, First Published Sep 19, 2021, 5:36 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 பணிகளுக்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 3 வகையான அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் கடந்த ஒரு மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசுப் பணிக்கு ஆள் தேர்வு தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில், சில பணிகளுக்கு நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வு ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்படாதது வருத்தமளிக்கிறது. தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு 6,417 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையைக் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் நாள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

Conduct Phase II Consultation: Ramadoss request

அந்தப் பணிகளுக்கு அதே ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் நாள் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, நவம்பர் 12ஆம் நாள் முடிவுகள் வெளியிடப்பட்டன. பின்னர், இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து, கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 17 வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில், மொத்தமுள்ள 6,007 பணியிடங்களில் 5,798 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் 209 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படவில்லை. அதேபோல், கடந்த நவம்பர் 2 முதல் டிசம்பர் 9 வரை நடத்தப்பட்ட தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வில் மொத்தம் 221 இடங்கள் நிரப்பப்படவில்லை.

இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் என, காலியாக உள்ள 430 பணியிடங்களும் பொதுப்போட்டிப் பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். இந்தப் பணியிடங்களை நடப்பாண்டின் தொடக்கத்திலேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பியிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாததால், அதன்பின் கொரோனா இரண்டாவது அலை, சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அந்தப் பணிகளுக்கான கலந்தாய்வை நடத்த முடியவில்லை. அதன்பின்னர், கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், 430 பணிகளுக்கான இரண்டாவது கட்டக் கலந்தாய்வு தொடங்கும் என்று அதில் பங்கேற்க வாய்ப்புள்ள ஆயிரக்கணக்கான தேர்வர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இன்று வரை கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

Conduct Phase II Consultation: Ramadoss request

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த 9,882 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் 16 லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பல்வேறு பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,452 பேர் அரசுப் பணியில் சேர்ந்து ஓராண்டுக்கும் கூடுதலாகி விட்டது. ஆனால், அவர்களுடன் ஒன்றாகத் தேர்வு எழுதியவர்கள், அரசுப் பணியில் சேருவதற்கான தகுதிகளைக் கொண்டிருந்தும், தங்களுக்கு வேலை கிடைக்குமா... கிடைக்காதா? எனக் காத்திருப்பது கொடுமையான மன உளைச்சலைத் தரும்.

அதுமட்டுமின்றி, இரண்டாம் கட்டக் கலந்தாய்வு மூலம் பணியில் சேர இருப்பவர்கள் ஓராண்டுக்கும் கூடுதலான ஊதியம், பணிமூப்பு உள்ளிட்ட மற்ற உரிமைகளையும் இழப்பார்கள். இந்த இழப்புகளை எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாது. இவை அனைத்துக்கும் மேலாக அரசு பணிக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வுக்காகக் காத்திருப்பவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தத் தனியார் வேலைக்கும் செல்ல முடியவில்லை.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்ட நிலையில், எந்த நேரமும் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்படலாம் என்பதால், அதற்காகத் தயார் நிலையில் காத்திருக்கின்றனர். தனியார் பணிக்குச் சென்றால் சான்றிதழ்களை அங்கு ஒப்படைக்க நேரிடும்; அரசுப் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பின்போது அதைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்காது என்பதால், தனியார் பணியைத் தவிர்த்து அரசு வேலைக்காகக் காத்திருக்கின்றனர். அதனால் கடுமையான பொருளாதார இழப்புகளுக்கும், அவமதிப்புகளுக்கும் அவர்கள் ஆளாகி வருகின்றனர்.

Conduct Phase II Consultation: Ramadoss request

எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நான்காம் தொகுதித் தேர்வுகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வுகளை தேர்வாணையம் உடனடியாக நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, முதல் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று அரசு வேலை பெற்றவர்களுக்கு இணையான பணி மூப்பும், ஊதிய விகிதமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios