மாணவர்களுக்கு குட்நியூஸ்... இனி 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம்..!
அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்குவது இந்த அரசின் உயர்ந்த முன்னுரிமை ஆகும். எனவே பள்ளி கல்விக்காக அதிகபட்சமான ஒதுக்கீடாக, 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் இடைவிடாமல் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்வதற்காக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாடபுத்தகங்களை அரசு வழங்கியது. 12-ம் வகுப்புக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் 1,912 வீடியோ பாடங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனால் 4,20,624 மாணவர்கள் பயன் அடைந்தனர்.
மேலும், 2021-22ம் நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.