complaint against stalin in chennai police commissioner

சாதிய மோதல்களை உருவாக்கும் வகையில் பேசிய ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சாதி விழா ஒன்றில் ஸ்டாலின் பேசிய வீடியோவை அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவில், ஆதாரங்கள் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டை பெறுவதற்காக சாதிய மோதல்களை உருவாக்கும் வகையில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

அந்த வீடியோவில், விருதுநகர் நகராட்சித் தேர்தலில் காமராஜர் போட்டியிடுவது தெரிந்த சில பெரியவர்கள், அவரை ஒரு அறையில் வைத்து பூட்டினர். இந்த செய்தியை அறிந்த முத்துராமலிங்கத் தேவர் பொதுக்கூட்டத்தின் வாயிலாக காமராஜரை விடவில்லை என்றால் அதனால் ஏற்படக்கூடிய விபரீதங்களுக்கு நான் பொறுப்பல்ல என கூறினார். அதன்பின்னரே காமராஜர் விடுவிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் பேசியுள்ளார்.

காமராஜர், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராகவும் மாநில தலைவராகவும் பதவிவகித்தார். அப்போது முத்துராமலிங்கத் தேவர், முதுகுளத்தூர் வட்டார தலைவர் பதவியில் இருந்தார். அதைவிட உயர்பதவியில் இருக்கவில்லை. அப்படி இருக்கையில் முதுகுளத்தூர் வட்டார தலைவருக்கும் விருதுநகருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

தான் கலந்துகொண்ட சாதிக் கூட்டத்தினரை திருப்திப்படுத்தும் வகையிலும் காமராஜரின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் விருதுநகர் நாடார்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கத்துடனும் ஸ்டாலின் பேசியுள்ளார். இவ்வாறு பொய்யான கட்டுக்கதைகளை கூறி தமிழகத்தில் சாதிய மோதல்களை உருவாக்கி அதன்மூலம் அரசியல் லாபம் அடைய முயற்சிக்கும் ஸ்டாலினை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.