இளைஞர்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்மத்தை தூண்டும் படங்களை பீட்டா அமைப்பு தனது பெயரில் பதிந்து வைத்துள்ளது என பீட்டா அமைப்பு மீது சென்னை போலீஸ் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சமூக ஆர்வலரும் ஆய்வாளருமான எனோக் மோசஸ் என்பவர் , சென்னை, வேப்பேரியில் உள்ள போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் நேற்று பீட்டா விலங்குகள் நல அமைப்பு மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது-

பீட்டா அமைப்பு தொடர்பாக இணையதளத்தில் படங்களைத் தேடினால், மிகவும் புகழ்பெற்றவர்களின் ஆபாசமான படங்கள் வருகின்றன என்று ஒரு குழந்தை என்னிடம் தெரிவித்தது.
 அதை நான் சோதனை செய்தபோது, விபச்சாரத்தை ஊக்கும் நபர்களின் புகைப்படங்கள் அதில் மிகவும் ஆபாசமாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதைக் கண்டேன். தன்னுடைய விளம்பரத்துக்காக பீட்டா இந்தியா நிறுவனம் பெண்களைப் பயன்படுத்தி ஆபாசமாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளது.

போஸ்கோ சட்டப்படி, குழந்தைகளிடம் பாலியல் தொடர்பான சமிக்கை செய்தல், படங்களை காட்டுதல், தொடுதல் சீன்டல்கள், தொந்தரவு செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

கடந்த காலத்தில் பீட்டா இந்தியா அமைப்பு தனது அமைப்புக்கு விளம்பரம் தேடுவதற்காக இளைஞர்களையும், குழந்தைகளையும் பாலியல் ரீதியாக நிர்வான புகைப்படங்கள் எடுக்கப் பயன்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பில் இருப்பவர்கள் இரட்டை நிலைப்பாடு உள்ளவர்கள். தோல் ஆடைகள், இறைச்சி சாப்பிடுபவர்களை தங்களின் விளம்பரத்துக்காக பயன்படுத்துகிறது.

 விலங்கியல் குறித்தும் முழுமையாக அறியாதவர்கள், எந்த கல்லூரியிலும் சென்று முழுமையாக விலங்குகள் குறித்து படிக்காதவர்கள், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இருக்கும் உறவுகளைத் அறியாதவர்கள், கலாச்சார ரீதியாக இரு தரப்பினரும் எப்படி உதவிக்கொள்கிறார்கள் என்பதை அறியாதவர்களை தங்கள் விளம்பரத்துக்கு பீட்டா அமைப்பு பயன்படுத்தி வருகிறது.

பீட்டா இந்தியா அமைப்பின் கடந்த கால செயல்பாடுகளைப் பார்த்தால் அது ‘ப்ளேபாய்’ போன்ற செயல்களையே கொண்டு இருக்கிறது. ஆதலால், இந்தியாவில் பீட்டா அமைப்பு இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் பீட்டா இந்தியா அமைப்பு, தவறான செயல்களை பரப்பி வருகிறது என்று நான் நம்புகிறேன்.

பீட்டா இந்தியா அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் பிரபலமானவர்கள் பெரும்பாலும் நிர்வான நிலையில் இருப்பதுபோலவும், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் புகைப்படங்களில் இடம் பெற்று உள்ளனர்.

 ஆதலால், போஸ்கோ சட்டம், ஐ.டி. சட்டம், பெண்களை தவறாக சித்தரித்தல் சட்டம், ஆகியவற்றின் கீழ் பீட்டா இந்தியா, அமைப்பின் முக்கியத் தலைவர்கள், தன்னார்வலர்கள், பணியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக இந்தியா, தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், குழந்தைகள் தவறான பாதைகளுக்கு இழுத்துச்செல்லப்படுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.