எந்தப் படம் ஹிட் ஆனாலும் அதன் மேல் புகார் கொடுப்பது ட்ரெண்டாகி வருகிறது.

குறையில்லாத படைப்புகளை உலகில் யாருமே தரமுடியாது. அது எந்தக் கலையாக இருந்தாலும் சரி, ஒரு குறையாவது இருக்கும். கடவுளால் கூட குறையின்றி ஒரு மனிதனையும் படைக்க முடிவதிலை. ஏதோ ஒரு குறை எல்லோருக்கும் உண்டு. அப்படி இருக்க, விளம்பரத்துக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ சினிமா படைப்புகளை மட்டும் பூதக்கண்ணாடி வைத்து பார்க்கும் வழக்கம் நம் சமுதாயத்தில் வளர்ந்து வருகிறது. இதற்கு சமீபத்தைய உதாரணம் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மாநாடு திரைப்படம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மாநாடு படம் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கிறது என்று பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், மேலும் ஒரு புதிய புகார் எழுந்துள்ளது. மாநாடு திரைப்படம் சார்பில் யூடியூபில் பதிவேற்றப்பட்டுள்ள டீசர்களில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா புகை பிடிக்கும் காட்சியில் 'புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு' என்ற எச்சரிக்கை வாசம் இல்லை எனத் தமிழக சுகாதாரத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகையிலை பழக்கத்துக்கு எதிரான “Tobacco Monitor” என்ற அமைப்பு இந்த புகாரை அளித்துள்ளது.

சினிமா நட்சத்திரங்கள் என்ன செய்தாலும் இளைஞர்கள் அதில் ஈர்க்கப்படுவார்கள் எனும்போது மாநாடு படத்தில் பொறுப்பற்ற முறையில் புகைபிடிக்கும் காட்சிகள் அமைந்துள்ளது என்றும், முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கும்போது, குழந்தைகளும் இளைஞர்களும் அதனால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் உடனடியாக தலையிட்டு சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.