விளையாட்டு அனுபவம் மற்றும் உடல் திறன் சோதிக்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனத்தை மேற்கொள்ளாமல், விளையாட்டு ஆசிரியர் பணி நியமனத்திற்கும் போட்டித்தேர்வு நடத்தும் தமிழ்நாடு அரசின் முடிவு வன்மையான கண்டனத்திற்குரியது. 

போட்டித்தேர்வு முறையை கைவிட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு. தமிழ் நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டி தேர்வு மூலம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்ற அரசின் அறிவிப்பு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் உடற்கல்வி பயிற்றுநர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டு அனுபவம் மற்றும் உடல் திறன் சோதிக்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனத்தை மேற்கொள்ளாமல், விளையாட்டு ஆசிரியர் பணி நியமனத்திற்கும் போட்டித்தேர்வு நடத்தும் தமிழ்நாடு அரசின் முடிவு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

கடந்த 10 வருடமாக உடற்கல்வி ஆசிரியர் நியமனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உடற்கல்வி பயிற்றுநர்களது ஆசிரியர் கனவினை கானல் நீராக்கும் வகையில் திமுக அரசு போட்டித் தேர்வின் மூலம் பணியிடங்களை நிரப்ப முயல்வது சிறிதும் அறமற்ற செயலாகும். ஆகவே, உடற்கல்வி ஆசிரியர்களைப் பொறுத்தவரை எழுத்துத் தேர்வினை விடவும் விளையாட்டு அனுபவமே மிகமுக்கியம் என்பதால் தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வு முறையை முடிவைக் கைவிட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.