2011 உள்ளாட்சித் தேர்தலில் ஊரகப் பகுதிகளில் கிடைத்த முடிவுகள் தற்போது மாறுபட்டுள்ளது. அப்போது எல்லா எதிர்க்கட்சிகளும் தனித்துதான் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் அதிமுக ஊரகப் பகுதிகளில் மொத்தமாக வெற்றியை அறுவடை செய்தது. திமுக குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 91.91 சதவீத பதவிகளைக் கைப்பற்றியது. திமுக 4.58 பதவிகளையும் கைப்பற்றியது. இதேபோல ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 60.16 சதவீத இடங்களைக் கைப்பற்றியது. திமுக 15.56 சதவீத இடங்களை மட்டுமே வென்றது.
2011 உள்ளாட்சித் தேர்தலோடு ஒப்பிடும்போது ஊரகப் பகுதிகளில் அதிமுக சரிந்துள்ள நிலையில் திமுக தனது வெற்றியை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 9,624 ஊராட்சி தலைவர் பதவிகள், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு டிச. 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று தொடங்கி தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

